தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்பி ஜி. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
36வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைத்தார். முன்னதாக தலைக்கவசம் அணியாமல் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு நோட்டீசை வழங்கி தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து அவர் எடுத்துரைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு தலைக்கவசத்தை வழங்கினார். மேலும் பேரணியில் தலைக்கவசம் உயிர்க்கவசம், உயிரைக் காக்க ஹெல்மெட் போடு, சாலையில் அலைபேசி ஆபத்தாகும் நீ யோசி, மது அருந்தி வாகனம் ஓட்டாதே உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணி காவிரி நகர் பகுதியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியாக புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது